Wednesday, April 23, 2014

வீரியமடையும் பௌத்த தேசியவாதமும் இலங்கையின் எதிர்காலமும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்நாட்டினை ஒரு பௌத்த நாடாக மாத்திரமே அடையாளப்படுத்துவதில் குறியாக
இருந்து, அதற்காக சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட பௌத்த தேசியவாத சக்திகள் காலத்துக்கு காலம் பல்வேறு அடையளங்களிநூடாகவும்,வடிவங்களிநூடாகவும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்து வந்திருக்கின்றனர்.

மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்த நிலையிலும், அதனைத் தொடர்ந்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் கூடிய நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கான கால எல்லைகள் சட்ட ரீதியாக நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் பௌத்த தேசியவாத சிந்தனைகளை சிங்கள மக்களுக்கு மத்தியில் தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கும்,அதன் மூலம் தமது ஊழல்,நிர்வாக சீர்கேடுகளை மறைப்பதற்குமான அரசாங்கத்தின் ஒரு  நிழல் இயக்கமே பொது பல சேனாஎன்பது அனைவரும் அறிந்த விடயம்.

ஆரம்பத்தில் பொது பல சேனாவின் நடவடிக்கைகளில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் உடன்பாடு கண்டிராத போதும் அரசாங்கத்தின் மௌன அங்கீகாரமும், பல சேனாவின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு பொறிமுறையினை கண்டறிவதற்கு மக்களின் நலன்களில் அக்கறை கொண்ட சக்திகள் தவறியுள்ள நிலையிலும் சிங்கள மக்களுக்கிடையில் பொது பல சேனாவுக்கான அங்கீகாரம் மெல்ல மெல்ல வீரியமடைந்து வருகின்றன.

கற்றவர்கள்,மிதவாதிகள் , ஆன்மீகத் தலைவர்கள் என பலரும் பொது பல சேனாவின் நடவடிக்கைகளில் நியாயம் காண முற்படுகின்றனர்.அல்லது நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது பொதுபலசேனாவின் செயற்பாடுகளை அஸ்கிரிய பீட தேரர் மேதாகம தம்மானந்த நியாயப்படுத்தியிருக்கின்றார். பௌத்த மதத்தின் மரபுகளை பேணி வருகின்ற ஒரு நிறுவனத்தின் சமயத் தலைவர் அதற்கு நேர்மாறான ஒரு குழுவின் அத்துமீறிய செயற்பாடுகளை நியாயப்படுத்தியிருப்பது மிகவும் அதிர்ச்சியானதும், ஆச்சரியமானதும் ஆகும்.

ஏறக்குறைய பொதுபல சேனாவின் கூச்சல்களை ஒத்ததாகவே தேரரின் வாசகங்கள் அமைந்திருக்கின்றன.

when the government was resettling internally displaced persons in old villages along the Pulmude Road from Vavuniya to Trincomalee, security forces personnel had informed the Asgiriya Chapter that illegal resettlement was taking place in Mannar. Similar situations had occurred in the Lahugala forest, where they cut trees after the tsunami in 2004, in Pottuvil and even in the Akurana Town where the construction of housing has been done in a manner causing blocks and disturbances, he elaborated.


The Thera alleged that the true cost of the destruction of the forests of the Wilpattu National Park has been ignored. “As this is a national issue that we should talk about and when we do not talk about, it creates the environment for the BBS’s intervention” he added. (Ceylon Today)


இதன்மூலம் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்ற சவால்கள் நினைத்ததை விடவும் மிகவும் மோசமான,சிக்கலான ஒரு நிலைமையை அடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது. தவிரவும் இப்பிரச்சினையானது

யாரும் நினைத்த மாத்திரத்தில் இந்நிலைமைகளை கையாண்டு விடமுடியாத அளவுக்கு கைமீறிப் போய்க்கொண்டிருப்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.

இது தொடர்பில் கடந்த கால வரலாற்றுத் தவறுகள் மீதான சுய விமர்சனங்களும்,விவாதங்களும் உடனடியாகவே சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைத்து இலங்கை மக்களுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். அது முதன் முதலில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளில் இருந்தே ஆரம்பமாக வேண்டும்.

நிகழ்கால பதட்டங்களை தனிப்பதற்கான சரியான பொறிமுறை ஒன்றை காணத் தவறியமை மற்றும் கடந்த காலங்களில் தேசிய அரசியலில் தமது வகிபாகத்தினை சரிவர செய்யத் தவறியமை என்பவற்றின் அடிப்படையில் அது முஸ்லிம் அரசியல் தலைமைகளைச் சாருகின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கடந்த கால அரசியல் தவறு என்பது மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் இறுதி நான்கு வருட அதிகார பேரம் பேசும் அரசியலில் தொடங்கி அவரது மரணத்தின் பின் ரவூப் ஹகீம் தலைமையில் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக ஆட்சி மாற்றங்களை நடாத்திக் காட்டியது உட்பட இன்று அதிகார ஆசைகளுக்காக முஸ்லிம் அரசியல் தலைமைகள் பல்வேறு கூறுகளாக பிரிக்கப்பட்டு முஸ்லிம் சமூகம் பலவீனப்படுத்தப்பட்டது வரை மறுவாசிப்பு செய்யப்படல் வேண்டும்.

தமிழர் தரப்பை பொறுத்தவரை நியாயமான கோரிக்கைகள வெல்வதற்காக பிழையான வழிமுறைகளை கையாண்டமை தொடர்பில் சுயவிமர்சனம் செய்யப்படல் வேண்டும்.

தமது உரிமைகளை மறுத்த அரச தரப்புடன் போராடி தமது உரிமைகளை பெற நினைத்தவர்கள் தமது இலக்குகளாக அப்பாவி சிங்கள பொது மக்களையும், மத குருக்களையும் அவர்களது சமயத் தளங்களையும் தமது தமது தாக்குதல் இலக்குகளாக தேர்வு செய்ததன் மூலம் அரசாங்கத்தினதும்,அரச படைகளினதும்  எந்தவொரு நடவடிக்கைகளும் சிங்கள மக்களையும்,அவர்களது பௌத்த மதத்தினையும் பாதுகாப்பதற்கான ஒரு நியாபூர்வமான நடவடிக்கையாகசிங்கள மக்கள் தீர்ப்பு செய்யும் வகையில் அவர்களை  அரசாங்கம் வழிநடாத்துவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கடந்த 30 வருடங்களில் பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொடுத்து பல்வேறு துன்பங்களை கடந்து வந்த சிங்கள மக்கள்,
இனிமேலும் அத்தகைய ஒரு நிலைமை தமக்கு எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என நினைக்கின்றனர். அதற்காக தீவிரப்போக்கான ஒரு அணுகுமுறை அவசியம் என்பது கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளால் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது.
சிங்களத் தரப்பினரைப் பொறுத்தவரை இலங்கைத் தீவின் சமூகங்களுக்கு இடையிலான சுமூகமான வாழ்க்கை சீரழிக்கப்பட்டது தொடர்பில் அதன் பிரதான பொறுப்புக் கூறலை சிங்கள மக்களை பிரதிநித்துவம் செய்து ஆட்சி செய்த சிங்கள அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும் என்பதிலிருந்து சுயவிமர்சனம் துவங்கப்படல் வேண்டும்.

ஏனெனில்,மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஸ்ரீ.ல.சு.க யும் ஐ.தே.க வும் தாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சிறுபான்மையினருக்கு எதிரான
இனவாதக் கொள்கைகளை சிங்கள மக்களுக்குள் பிரச்சாரம் செய்தனர்.

அதன்வழி தொடர்ந்த பாரம்பரியம் இன்று நேரடியான அரசியல் ஸ்தாபனங்களுக்கு ஊடாக அல்லாமல் பௌத்த சமயம் சார் நிறுவனங்களுக்கு ஊடாக தொடர்கிறது.

ஆட்சியாளர்கள் தமது ஊழல்களையும்,வினைத்திறன் குன்றிய தமது நிருவாகத்தின் பலவீனங்களையும் மறைப்பதற்காக சிறுபான்மை
மக்களுக்கெதிரான இனவாத சிந்தனைகளை சிங்கள மக்களுக்கிடையில் ஊட்டி வளர்க்கின்றனர்.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் செய்த தவறுகளின் விளைவுகளை நாட்டு மக்கள் போதுமானளவு அனுபவித்து விட்டனர். இனிமேலும் அத்தகைய மோசமான விளைவுகளை சந்திப்பதற்கு மக்களுக்கு சக்தியில்லை.

ஆட்சியாளர்கள் தமது குறுகியகால லாபங்களுக்காக இவ் இனவாத சக்திகளை ஊக்குவித்தாலும் அதனால் நீண்ட காலங்களில் பயனடையப் போவது புதிய உலக ஒழுங்கினை வடிவமைத்து வருகின்ற வெளிச்சக்திகளே ஆகும்.

அனைத்து இன இலங்கை மக்களும் நீண்ட காலங்களில் பாதிப்படையப் போகின்றார்கள்.

ஏற்கனவே கரையோர நிலங்களின் ஆக்கிரமிப்பு,தீர்வையற்ற கசினோ சூதாட்டம்,விவசாய நிலங்களின் அழிப்பு என பல்தேசியக் கம்பனிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்ட நிலையில் அவற்றில் இருந்து பெரும்பான்மை மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதத்தினை இன்று வரை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை அபே ரடஇது எங்களுக்கு (பௌத்தர்களுக்கு) சொந்தமான நாடு என்ற தேசியவாத அலைகளுக்குள்  அவர்கள் அள்ளுண்டு சென்றாலும், குறுகிய எதிர்காலத்துக்குள் இது சிங்கள,தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவர்,என யாருக்குமே சொந்தமில்லாத பல்தேசியக் கம்பனிகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற கொள்கை
வகுப்பாளர்களின் தீர்மானங்களுக்கு அமைவாக ஆட்சி செய்யப்படுகின்ற ஒரு நாடாக மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன என்பதை சமகால நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இவற்றை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டு செயற்படாது போனால் நாடு இன்னுமொரு பாரிய அனர்தத்தினை சந்திப்பது தவிர்க்க இயலாமல் போவது மாத்திரமின்றி அது இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும், ஒற்றுமைக்கும் நிரந்தரமாகவே வேட்டு வைப்பதாகவே அமைந்து விடும்.

நன்றி. Abdul Wajith (www.sonakar.com)



No comments:

Post a Comment